போலீஸ் போல நடித்து கேரள தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் கொள்ளை - கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில் காவலர்கள் போல நடித்து ரூபாய் 50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழிப்பறி கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். தனது தொழிலுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க தமிழகம் வந்தார். கோவையை சேர்ந்த நண்பர் கனகராஜ் என்பவர் திருச்சியில் உள்ள தனக்கு அறிமுகமான ராஜேஷை அணுகுமாறு கூறினார்.

இதனையடுத்து சைனேஷ் அவருடைய நண்பர்கள் கனகராஜ், சஞ்சீவ், ரவி, சார்ஜித் ஆகிய ஐந்து பேரும் ஒரு வாடகை காரில் திருச்சி சென்றனர். அவர்களை சந்தித்த ராஜேஷ், "திருச்சியை விட கோவையிலேயே பொருட்கள் விலை குறைவாக வாங்கலாம்" எனக்கூறி உபேந்திரராவ் என்பவருடன் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
உபேந்திரராவ் உடன் சைனேஷ் மற்றும் கனகராஜ் மூவரும் ஒருகாரிலும், மற்றவர்கள் எல்லோரும் வாடகை காரிலும் கோவை நோக்கி வந்தனர்.
இவர்கள் சென்ற கார் வெள்ளக்கோவில் அருகிலுள்ள பகவதிபாளையம் அருகே சென்றபோது சைனேஷ் வந்த காரை ஜீப்பில் வந்த போலீஸ் உடை அணிந்த நால்வர், சாதாரண உடையில் இருந்த மூவர் கொண்ட ஒரு கும்பல் வழிமறித்தனர்.
காரை சோதனையிடுவதுபோல் நடித்த அவர்கள் பெட்டியில் இருந்த 50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு உபேந்திரராவை மட்டும் தங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மற்றவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிச்சென்று விட்டனர்.
இதைதொடர்ந்து சைனேஷ் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தொடர்பு கொண்டு விசாரித்த பொது எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன் பிறகே இது திட்டமிட்ட கொள்ளை சம்பவம் என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சைனேஷ் வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தார். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications