தமிழக மீனவர்கள் 7 பேர் கைது- இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற ஏழு மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 7 பேர், நெடுஞ்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அத்துடன் மீனவர்களின் வலைகளை அறுத்து, படகுகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதுகுறித்து இருநாட்டு அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.