கமுதி அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் இரு தரப்பினரிடையே மோதல்-7 பேருக்கு அரிவாள் வெட்டு
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கமுதி: கமுதி அருகே கூட்டுறவுசங்க தேர்தல் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூர் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலுக்கான போட்டி நடைபெற உள்ளது. இதற்காக ஆனையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கு மருதங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் வன்னிமுத்து, தி.மு.க. பிரமுகர் தியாகராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் திடீரென மோதிக் கொண்டனர்.
இதில் இருதரப்பையும் சேர்ந்த 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.