அம்மா வேணும்... சேலம் விபத்தில் தாய், தந்தை, தாத்தா, பாட்டியை இழந்தது அறியாமல் கேட்கும் சிறுவன்!
சேலம்: சேலத்தில் நடந்த விபத்தில் தாய், தந்தையை இழந்த சிறுவன், அம்மா வேண்டும் என்று அடம் பிடித்த சிறுவனை பார்த்தோர் நெஞ்சை உருக வைத்தது.
சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
இதனிடையே பெங்களூருக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து வந்த பேருந்து லாரியை கவனிக்கவில்லை.

பயங்கர மோதல்
அருகில் வந்தபோது பேருந்தின் ஓட்டுநர் லாரியை பார்த்துவிட்டார். இதனால் பதற்றமடைந்த அவர் லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே பாலக்காடு நோக்கி சென்ற மற்றொரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

7 பேர் பலி
இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தெரியவில்லை
இந்நிலையில் சர்வீஸ் சாலையில் இரண்டரை வயது சிறுவன் மண் தரையில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தார். அம்மா... அம்மா... என அழுத அவனை அங்கிருந்தவர்கள் தூக்க முயற்சித்தும் அவன் யாரிடமும் செல்ல மறுத்துவிட்டு அழுதபடியே இருந்தான்.

தங்களுடையது இல்லை
அப்போது மீட்பு பணிக்காக வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர் கவிதா அந்த குழந்தையை மீட்டு கருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களிடம் குழந்தையை காட்டி அவர்களுடையதா என கேட்டார். யாரும் தங்களுடையது இல்லை என கூறினர்.

விபத்தில் சிக்கி பலி
தனது பெயரை மட்டும் ஈத்தன் என உச்சரித்த சிறுவனால் பெற்றோர் பெயரை கூற முடியவில்லை. அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்து கிடந்தான். இதையடுத்து அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் அந்த குழந்தையின் தந்தை சிஜி வின்சென்ட், தாய் பீனுமேரி என்பதும் தெரியவந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்த தங்கள் சொந்த ஊரான கொச்சிக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சித்தியிடம் குழந்தை ஒப்படைப்பு
குழந்தையின் தாத்தா, பாட்டியும் விபத்தில் உயிரிழந்துவிட்டனர். தாய், தந்தை , தாத்தா, பாட்டி ஆகியோர் இறந்தது தெரியாமல் அம்மா வேண்டும் என்று கேட்டு குழந்தை அடம்பிடித்ததால் அங்கிருந்தோர் கண்கலங்கினர். இதையடுத்து குழந்தை அவரது சித்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. சித்தியை பார்த்த சிறுவன் ஓவென அழுதான்.












Click it and Unblock the Notifications