திருச்சியை உலுக்கிய கொடூர வாட்ஸ் ஆப் புகைப்படம் + வீடியோ!
கல்லூரி மாணவர் தற்கொலை தகவலை நண்பர்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பியுள்ளார்.
திருச்சி: தன்னுடைய மரணத்தை மாணவர் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களை உறைய வைத்துள்ளது.
துவரங்குறிச்சியை அருகே உள்ள ராசிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். 18 வயதுதான் ஆகிறது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
துக்க செய்தி
இவர் நேற்று தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் அனுப்பி இருந்தார். அதில் "துக்க செய்தி, ஒரு நிமிடம் படிக்கவும்" என்று தலைப்பு இருந்தது. இதை பார்த்ததுமே நண்பர்களுக்கு பரபரப்பு கூடிவிட்டது. அந்த செய்தியில் ராமர் தன்னுடைய ஊர், முகவரி, எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். கூடவே, எனது இறப்பிற்கு குடும்பமோ, உறவினர்களோ, நண்பர்களோ காரணமில்லை. ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள இரண்டு குடும்பங்கள் தான் காரணம்.
நண்பர்கள் பார்க்க வேண்டும்
நான் இறந்த பின்பும் எனது ஆத்மா அந்த இரண்டு குடும்பங்களையும் அடியோடு அழிக்கும். எனது இறுதி முகத்தினை நண்பர்கள் பார்க்க வேண்டும். ஜோதிட மனிதன் ஒருவனால் எனக்கு நேர்ந்த இந்த மரணம் இனிமேல் எனது ஊரில் யாருக்கும் நேரிடக்கூடாது, தூக்கு மாட்டி இறப்பவன் அனைவரும் கோழை இல்லை. இந்த உலகில் உயிரோடு இருந்து பாவங்கள் செய்வதை விட இறப்பது மேல். நான் இறந்த பின்பும் எனது மரணம் பற்றிய வழக்குகளை காவல்துறையினர் எடுக்க கூடாது.
கோயில் மணியில் ஆன்மா
எனது நண்பர்களுக்கு இறந்த செய்தியை தெரிவிக்கவும். என்னைப் பார்த்ததை போன்று என் குடும்பத்தையும் இனி நண்பர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அங்குள்ள கோவில் முன்பாக மணியில் மீது காற்றில் ஊஞ்சலாடி கொண்டிருக்கின்றது எனது ஆன்மா. மேலும் என் இறப்பிற்கு காரணமான இரண்டு குடும்பத்தை பழிவாங்குவேன். மேலும் என் மரணத்திற்கு நான் வைத்திருந்த மொபைல் போனோ? லேப்டாப்போ காரணமில்லை. கடந்த இரண்டு வருடமாக கொண்டாட முடியாத மாரியம்மன் கோவில் திருவிழாவை ஊர் கூடி நடத்திட வேண்டும்." இவ்வாறு அதில் எழுதப்பட்டது.
வீட்டில் ராமர் இல்லை
அத்துடன், தூக்கில் தொங்குவது போன்றும் ஒரு படமும், இந்த இறப்பு பற்றி தொலைக்காட்சியில் செய்தி வருவது போன்று தயார் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வந்தது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அத்தனை பேரும் பதறி அடித்து கொண்டு, ராமர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு ராமர் இல்லை. காலையிலே வெளியில் சென்று விட்டார் என்று வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் அவர்களிடம் வேற எந்த விவரமும் சொல்லாமல், பல்வேறு இடங்களிலும் ராமரை தேடிப் பார்த்தனர். ஆனால் ராமர் கிடைக்கவேயில்லை.
அது ராமரேதான்
இந்நிலையில், அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி உள்ள மலையில் ஒருவர் தூக்கில் தொங்குவதை பார்த்தாக கிராமத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். அத்துடன் பலரும் பலரும் சென்று அந்த மலையில் தூக்கில் தொங்குவது யார் என்று பார்த்தனர். கடைசியில் அது ராமரேதான்! தகவலறிந்த வந்த நண்பர்கள், குடும்பத்தினர் சம்பவம் ராமரின் உடலைப் பார்த்து கதறி கதறி அழுதனர். தகவல் அறிந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இறந்தவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதி என்பதுடன் காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடும் இடம் அது.
இப்படியும் நடக்குமா?
அதனால், கும்மிருட்டிலும், டார்ச் லைட் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பின்னர் ராமரின் உடல் மலையில் இருந்து எடுத்து கீழே கொண்டு சென்றனர். இதையடுத்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்காக இறப்பை தானே தேடிக் கொண்டதை, முன்னரே எழுதி விட்டதுடன் செய்தி போன்று தயாரித்து அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.