சென்னை போரூர் அருகே பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுவன் பலி
போரூர் அருகே பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: போரூர் அருகே பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே மாணவன் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், ஆர்.ஆர். நகர் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான மாசி மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியகொளுத்துவான்சேரி, மதுரம் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவரது மகன் கிருதீஸ்வரன். மூன்றரை வயதான சிறுவன் இந்த பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தான்.
திறந்திருந்த செப்டிக் டேங்க்
இன்று மதியம் பள்ளி வளாகத்தில் உள்ள பாத்ரூமில் சிறுநீர் கழிக்க எல்கேஜி மாணவர்கள் பாத்ரூமிற்கு சென்றனர். அப்போது அங்கு அடைப்புகள் நீக்குவதற்காக செப்டிங்க் டேங்க திறந்து வைத்து விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
உள்ளே விழுந்த சிறுவன்
அப்போது அந்த சிறுவன் திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் உள்ளே விழுந்துள்ளான். இதனை கண்டதும் மற்ற மாணவர்கள் பதறியபடி அங்கிருந்து ஓடி சத்தம் போட்டனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களள் ஓடி வந்து கழிவு நீர் தொட்டியில் மூழ்கிய மாணவனை நீண்ட நேரத்திற்கு பின்பு மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிதாபமாக பலியான சிறுவன்
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயம்மாக்கள் இல்லை
மேலும் பாத்ரூம் உள்ள இடத்திலேயே கழிவு நீர் தொட்டி உள்ளது . பணிகள் நடக்கும் போது அதனை மூடி வைக்காமலும் எச்சரிக்கை பலகை வைக்காமலும் இருந்துள்ளனர். பள்ளியில் பயிலும் சிறு வயது மாணவர்களை பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் பள்ளியில் பணியாற்றும் ஆயாம்மாக்கள் அழைத்து செல்ல வேண்டும்.
பெற்றோர் புகார்
ஆனால் இந்த பள்ளியில் சிறுவர்களை பாத் ரூமிற்கு தனியாக அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகம் இறந்து போன சிறுவனின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பொதுமக்களும், பிள்ளைகளின் பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
உடலை வாங்க மாட்டோம்
மேலும் இந்த பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பள்ளி உரிமையாளர் மாசிலாமணியை கைது செய்யும் வரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.