பெட்ரோல் குண்டு வீச்சிலிருந்து திருமாவளவன் உயிரை காப்பாற்றிய வாட்ஸ்சப் மெசேஜ்
தஞ்சை: பட்டுக்கோட்டை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த திட்டத்தை போலீசார் முன்கூட்டியே கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்ய உதவியது ஒரு வாட்ஸ்சப் மெசேஜ் ஆகும்.
பட்டுக்கோட்டையில் திருமண விழாவிற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருமணம் முடிந்து மன்னார்குடியில் ஒரு திருமணவிழாவில் கலந்துகொள்ள செல்லும் வழியில் வடசேரியில் கொடியேற்றிவிட்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் அனுமதியும் வாங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆலத்தூரில் உள்ள நுழைவுவாயில் அருகே சிலர் திருமாவளவனை தாக்கும் நோக்கத்தில் காத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பெட்ரோல் குண்டுகளுடன் மறைந்திருந்த வாலிபர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
போலீசார் அலட்ர் ஆக இருக்க காரணம், முந்தைய நாள் இரவில் குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பகிரப்பட்ட வாட்ஸ்சப் மெசேஜ் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வாட்ஸ்சப் தகவல் இதுதான்:
'தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவரும் திருமாவளவன், தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதியில் சாதிய கலவரத்தை தூண்டும் விதத்தோடு கொடியேற்றுவிழா நடத்த இருப்பதாக தகவல் தெரிந்தது. இதையறிந்த மக்கள் முன்னேற்ற கழகம் நாளை தடுத்து நிறுத்த உள்ளது!
வடசேரியிலுள்ள பிள்ளையார் கோவில் முன்பு நாளை ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் காலை 8 மணியளவில் ஒன்று கூடி தங்களது எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்யவும்! M.R.செங்குட்டுவன் வாண்டையார் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார். உணர்வாளர்களே ஒன்று கூடுங்கள்..! -இப்படிக்கு மக்கள் முன்னேற்றகழகம் மற்றும் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை.
இதுதான் வாட்ஸ்சப் தகவல்.