ஆம் ஆத்மிக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.. குஜராத் போலீஸ், ஐபி மீது புகார்!!
அகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக குஜராத் மாநில போலீசாரும் உளவுப் பிரிவினரும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
குஜராத்தில் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளது. தற்போது ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றது வருகிறது.
இந்த வேட்பாளர் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நிறைவடையும் என தெரிகிறது. குஜராத்தில் மொத்த 1.25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தொடர்பாக தேவையில்லாத விசாரணைகளை குஜராத் போலீசாரும் உளவுப் பிரிவினரும் மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து குஜராத் மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் சுக்தேவ் படேல் கூறுகையில், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகத்தை குஜராத் போலீஸ், மாநில உளவுப் பிரிவு பயன்படுத்தி வருகிறது. தேவையில்லாமல் எங்களது உறுப்பினர்கள், வேட்பாளர்கள் குறித்த விவரங்களை கேட்டு வருகின்றனர் என்றார்.