ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு எதிராக வேட்பாளர்கள்: ஆம் ஆத்மி அறிவிப்பு
சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை வெளியிடப்படும்.
ஊழலில் மூழ்கிய வேட்பாளர்களை எதிர்த்து எல்லா இடங்களிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து நிச்சயமாக வேட்பாளர்களை நிறுத்துவோம்' என்று தெரிவித்தார்.
உதயகுமாருக்கு வாய்ப்பு
உங்கள் கட்சியில் சேர்ந்திருக்கும் உதயகுமார் மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில் அவருக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டேவிட் பருண்குமார், 'அவர் கைது செய்யப்பட்டாலும் சிறையில் இருந்தபடியே வேட்பு மனுவினை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிடுவார்' என்று கூறினார்.