ரெனால்ட்-நிசான் நிறுவனத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்: ஜப்பான் தூதரகம் முற்றுகை
சென்னை: ரெனால்ட்-நிசான் நிறுவனத்தைக் கண்டித்தும், தமிழக தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஆம் ஆத்மி கட்சியினர் ஜப்பான் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்தில் உள்ள ரெனால்ட்-நிசான் தொழிற்சாலை "பயிற்சியாளர்கள்" என்கிற பெயரில் இருநூறுக்கும் மேற்பட்ட ஐ.டி.ஐ பட்டதாரிகளை இளம் வயதில் வேலைக்கு எடுத்துப் பின் அவர்களை நிரந்தரம் செய்யும் முன்னர், எந்த முகாந்திரமும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளது.

இவர்கள் அனைவரும் நிரந்தர பணியாளர்களின் வேலையையே செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு சென்ற மூன்று மாதங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுடன் ஓரகடம் இணை தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் பதிவு செய்துள்ளனர். இருபது நாட்களுக்கு முன்னால் கொடுக்கப்பட்ட இந்தப் புகாருக்கு நேற்று இந்நிறுவனம் பதில் சொல்லாமல் வாய்தா கேட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வராத ரெனால்ட் நிசான் அமைப்பை எதிர்த்தும், அவர்கள் இந்தியர்கள் மேல் திணிக்கும் நவீன அடிமைத்தனத்தை எதிர்க்கும் வகையிலும் சவுக்கடி போராட்டம் ஜப்பான் தூதரகம் முன் இன்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசும் ஜப்பான் தூதரகமும் தலையிட்டு உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட அனைவருக்கும் நிரந்தர பணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ரெனால்ட்-நிசான் நிறுவனம், 2008ஆம் ஆண்டு தமிழக அரசின் சலுகைகளுடனும், குறைவான விலையில் 670 ஏக்கர் நிலம், மற்றும் ஒரு ஏரி, அரசே போட்டுக் கொடுத்த சாலைகள் போன்றவற்றுடன் துவக்கப்பட்டது.

40,000 தொழிலாளர்களுக்கு வேலைகள் தருவதாக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் வெறும் 1500-2000 நிரந்தர பணியாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற 5000 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பெரிய அளவில் லாபம் ஈட்டித் தந்த தொழிலாளர்களை வெளியே அனுப்ப ஆரம்பித்துள்ளார்கள்.
சென்னையில் துவங்கப்பட்ட செல்போன் தயாரிப்பு கம்பெனியாக நோக்கியா மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதேபோல ஃபாக்ஸ்கான் நிறுவனமும் மூடப்பட்டதை அடுத்து ஆயிரத்து ஐநூறு பேர் வேலை இழந்தனர். இந்த நிலையில் நிசான் நிறுவனமும் தமிழக தொழிலாளர்களை முன்னறிவிப்பு இன்றி வேலையை விட்டு நிறுத்தி வருகிறது என்பது ஆம் ஆத்மி கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications