"வெள்ளை" ரவி அண்ணன் "ஆறு விரல்" பாபு... தொழில் ரவுடித்தனம்... 10 வருடத்திற்குப் பின் கைது!
சென்னை: 53 வயதான ஆறு விரல் பாபு என்ற ரவுடியை சென்னை போலீஸார் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்துள்ளனர். இத்தனை காலமாக ஆறு விரல் பாபு தலைமறைவாக இருந்து வந்தாராம்.
சென்னையில் அவ்வப்போது திடீரென ரவுடிகள் வேட்டை நடைபெறும். அந்த வேட்டையின்போது நீண்ட காலமாக ரவுடித்தனம் செய்து வரும் சமூக விரோதிகளைப் போலீஸார் துரத்திப் பிடித்து கைது செய்வர்.
அந்த வகையில் தற்போதைய நடவடிக்கையில் இந்த ஆறு விரல் பாபு சிக்கியுள்ளார். அவரை 10 வருடத்திற்குப் பிறகு சென்னை போலீஸார் கைது செய்துள்ளனராம்.
53 வயது பாபு
பாபுவுக்கு வயது 53 ஆகிறது. இவரைப் பிடிக்க ரத்தினவேல் பாண்டியன் என்ற இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
ஏழுகிணறு பகுதியில் வைத்து
தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்பட்ட பாபுவை, சென்னையின் மையப் பகுதியான ஏழுகிணறுப் பகுதியில் வைத்துப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளை ரவியின் அண்ணன்
பாபு, வேறு யாருமில்லை, சென்னையைக் கலக்கி வந்த தாதாவான வெள்ளை ரவியின் அண்ணன்தான். வெள்ளை ரவி கடந்த 2007ம் ஆண்டு இறந்து விட்டார்.
ஆயுள் தண்டனைக் கைதி
பாபு ஆயுள் தண்டனைக் கைதி என்பது முக்கியமானது. 1989ம் ஆண்டு பாலு என்பவரைக் கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
போலீஸ் பிடியிலிருந்து தப்பியவர்
கடந்த 2001ம் ஆண்டு வழக்கு தொடர்பாக அவரை வேலூர் மத்திய சிறையிலிருந்து சென்னை கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர் போலீஸார். பின்னர் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தப்பி விட்டார் பாபு.
2003ல் மீண்டும் கைது
அதன் பின்னர் 2003ம் ஆண்டு மீண்டும் போலீஸ் பிடியில் சிக்கினார் பாபு. மீண்டும் வேலூர் சிறைக்குப் போனார். ஆனால் அதே சிறையில் வெள்ளை ரவி அப்போது அடைக்கப்பட்டிருந்ததால் சேலம் சிறைக்கு பாபுவை மாற்றினர். பின்னர் 2004ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பரோலில் வந்த பாபு, அதன் பின்னர் மீண்டும் தலைமறைவாகி விட்டார்.