மன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி
எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஆளுநருக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பதிவிட்டு இருந்தார் . இதனால், எஸ்.வி சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், எஸ்.வி சேகர் பெண்கள் பற்றி தெரிவித்து இருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு வருகிறோம். தவறான கருத்துகளைப் பரப்புவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் கருத்தை தெரிவித்துவிட்டு, அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம். சமூக வலைத்தளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறிவிட்டாலும், அது பரவிக் கொண்டேதான் இருக்கும்.
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் சூழல் வர வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் தவறான கருத்துகளை பரப்பக் கூடாது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.