ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே 'நன்றி' சொல்லி எச். ராஜாவுக்கு 'நச்' பதிலடி தந்த விஜய்!
மெர்சல் திரைப்படம் தொடர்பான நன்றி அறிக்கையில் ‘ஜோசப் விஜய்’ என்றே வழக்கம் போல குறிப்பிட்டு எச். ராஜாவுக்கு பதிலடி தந்துள்ளார் நடிகர் விஜய்.
Recommended Video
சென்னை: மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய் என குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூச முயன்ற பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர்.
மதச்சாயம்
இதன் உச்சகட்டமாக, நடிகர் விஜய், ஒரு கிறித்துவர்; அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் என நஞ்சை கக்கினார் பாஜக தேசிய செயலர் எச். ராஜா. அவரது இந்த விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
லெட்டர் பேடு
ஆனாலும் அடங்காத எச். ராஜா, விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு ஆகியவற்றையும் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அநாகரிகத்தை தொடர்ந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
செம அறை
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை வெளியாகி உள்ள லெட்டர் பேடும் கூட ஜோசப் விஜய் என்ற பெயரில்தான் உள்ளது. நடிகர் விஜய் ஒருபோதும் தம்முடைய சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டவர் அல்ல; ஆனால் ஓட்டு அரசியல்வாதிகள்தான் அவரை மத முத்திரைக்குள் திணிக்கின்றன. அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தாம் எப்போதும் பயன்படுத்தும் அதே லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு விஷமம் பிடித்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.
விஜய்க்கு ஆதரவு
சமூக வலைதளங்களிலும் விஜய், ஜோசப் விஜய் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எச். ராஜா வகையறாக்களுக்கு இப்படித்தான் பதில் தர வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.