திமுக, அதிமுகதான் இப்படின்னா.. இவருமா? விஜய்க்காக வைக்கப்பட்ட பேனரால் விபரீதம்! உயிர் தப்பிய சிறுவன்
கள்ளக்குறிச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர் சரிந்து சிறுவன் மீது விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த காலங்களில் பேனர் விபத்துகளின் போது விஜய் கூறிய கருத்துக்கள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன.
தமிழகத்தில் பேனர் சரிவதன் மூலம் ஏற்படும் விபத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் விவாதங்களாக வெடித்திருந்தது. கடந்த 2019ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் பைக்கில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ எனும் இளம் பெண் சாலையில் தடுமாறி விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல கடந்த 2021ம் ஆண்டு விழுப்புரத்தில் திமுக பேனர் மற்றும் கொடிக்கம்பம் நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். கடந்த ஆண்டு கோவையில் விளம்பர பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மீது பேனர் சரிந்து விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இப்படியாக பேனர் விபத்துக்கள் நடக்கும்போதெல்லாம் அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுவதும், பேனர் பொருத்தியவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் பேனர் விபத்துக்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இப்படியாக தற்போது விஜய் பேனர் சரிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
விஜய்யின் பிறந்தநாள் கடந்த 22ம் தேதி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சியில் அம்மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி சார்பில் கேக் வெட்டி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பிறந்த நாளுக்காக பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சின்னசேலம் பகுதியிலும் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பிறந்த நாள் முடிந்து 4 நாட்கள் ஆகியும் பேனர்கள் அகற்றப்படாமல் இருந்ததால், அப்பகுதி மக்களுக்கு தொந்தரவாக இருந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் சின்னசேலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிறந்தநாள் பேனர்களில் ஒன்று திடீரென கழன்று, அந்த வழியாக சென்றுக்கொண்டிருந்த சிறுவனின் தலை மீது விழுந்தது. இதில் சிறுவன் சரிந்து விழுந்து பேனருக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பேனரை தூக்கி எடுத்து சிறுவனை மீட்டனர். நல்வாய்ப்பாக சிறுவன் காயங்கள் ஏதுமின்றி உயிர் பிழைத்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாள் முடிந்தும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஏன் அகற்றவில்லை என்று அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகத்தான் தமிழகத்தில் பேனர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கின்றன. இதே நிலை நீடிக்க வேண்டும் எனில், மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள், நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல் உள்ள பேனர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக, அதிமுகவினர்கள்தான் அதிக அளவில் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள் என்றால், புதியதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய் தரப்பினரும் இப்படி பேனர் வைத்து அட்டகாசம் செய்யலாமா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது சுபஸ்ரீ மரணத்தின்போது,
"கைது செய்யவேண்டியவர்களை கைது செய்யாமல், லாரி டிரைவர்களை கைது செய்கிறார்கள்" என சுபஸ்ரீ விவகாரம் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியிருந்தது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications