கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் - நடிகர்கள் விஷால், வடிவேல் நலம் விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நடிகர்கள் விஷால், வடிவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகர்கள் விஷால், வடிவேல் இன்று மாலை நலம் விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த 1ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார கால சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமையன்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது தொண்டை, நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதை சரிசெய்ய ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நடிகர்கள் விஷால், வடிவேல் ஆகியோர் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதி உடல்நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருவரும் கூட்டாக செய்தியாளார்களை சந்தித்தனர். அப்போது வடிவேல் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார். அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திகிறேன். மூத்த தலைவர் கருணாநிதி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என வடிவேல் கூறினார். கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நடிகர் விஷால் தெரிவித்தார்.