"கருவின் குற்றமே.. காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே"... நெல்லையில் அதிமுக பரபரப்பு பேனர்!
நெல்லை: நெல்லையில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றக் கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.,வினர் சார்பில் தி.மு.க.,தலைவர் கருணாநிதியை விமர்சித்து பெரிய அளவிலான பேனர் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.

அதில் "கருவின் குற்றமே.. காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே.." என்ற தலைப்பில் கவிதை வடிவில் தி.மு.க.,தலைவர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.
இதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட தி.மு.க.,செயலாளர் அப்துல்வகாப் தலைமையில், மாவட்ட மாணவரணி செயலாளர் அருண்குமார், வக்கீல் நவ்ஷாத், கோபி, கவுன்சிலர்கள் நெல்லை போலீஸ் துணைகமிஷனர் சுரேஷ்குமாரிடம் மனுகொடுத்தனர். அவர், அவை ஒரு மணிநேரத்தில் அகற்றப்படும் என தெரிவித்தார். ஆனால் அகற்றப்படவில்லை.
இதைத் தொடர்ந்து நெல்லை முருகன்குறிச்சி அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பாக வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.,பேனர் அருகே தி.மு.க.,வினர் ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த பேனரை அகற்ற முற்பட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.,வினர் தாங்களாகவே அந்த பேனரை அகற்றினர். இதனால் அங்கு அதிமுகவினரும், திமுகவினர் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் குதித்தனர். கல்வீச்சிலும் இறங்கினர்.
கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்து இருதரப்பினரும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அ.தி.மு.க.,மற்றும் தி.மு.க.,வினருக்கு இடையே மோதல், கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து உதவி கமிஷனர் மாதவன் தலைமையில் போலீசார் இருதரப்பையும் தடியடி நடத்திக் கலைத்தனர்.
தற்போது நெல்லை மாநகர் முழுவதும் போலீஸ் மற்றும் மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.,பேனர்கள் உடனடியாக போலீசார் தரப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications