ஜெயலலிதா குணமடைய வேண்டி தீக்குளித்த அதிமுக நிர்வாகி உயிரிழப்பு
சென்னை: தமிழக முதல்வர் உடல் நலம் பெற வேண்டி தீக்குளித்த அதிமுகவைச் சேர்ந்த சற்குணம் உயிரிழந்தார்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 23 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு வகையான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று தாம்பரம் மெப்ஸ் அருகில் உள்ள சிக்னல் அருகே திடீரென ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று கத்திக் கொண்டே சாலையில் ஓடினார். அவரை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், உடலில் தீ வைத்துக் கொண்டவர் தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி சற்குணம் என்பது தெரியவந்தது.