வாழ்க தீபா சின்னம்மா.. வாழ்க சசிகலா சின்னம்மா.. முத்துப்பேட்டை அதிமுகவில் கலகல!
எம்ஜிஆர் நினைவு தினத்தன்று அவரது சிலைக்கு மாலை போட வந்த அதிமுக தொண்டர்கள் சின்னம்மா சசிகலா வாழ்க என்று கோஷமிட்டதும் போட்டிக்கு சின்னம்மா தீபா வாழ்க என்று எதிர் கோஷமிட்டனர்.
திருவாரூர்: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானதில் இருந்து கூடவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாருக்கும் ஆதரவு பெருகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்த உடன் அதிமுக தொண்டர்கள் சின்னம்மா சசிகலா வாழ்க என்று முழக்கமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத தீபாவின் ஆதரவாளர்கள் பதிலுக்கு சின்னம்மா தீபா வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை முத்துப்பேட்டை அதிமுக தொண்டர்களிடையே தகராறாக மாறிவிடுமோ என்ற நிலையில், அங்கு இருந்த மூத்த அதிமுக நிர்வாகிகள் சிலர் இருதரப்பையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதேப் போன்று பூந்தமல்லியில் உள்ள அதிமுக தொண்டர்கள், தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து நகரின் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். இது இந்தப் பகுதியில் உள்ள சசிகலா ஆதரவாளர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications