அதிமுகவிலும் அக்கப்போர்- கட்சி தேர்தல் பணிமனையை திறக்க மறுத்த சென்னை மேயர்!!
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.கவின் தேர்தல் பணிமனையை சென்னை மேயர் துரைசாமி திறந்து வைக்காததால் அக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் விஜயகுமார். அவர் மேயர் சைதை துரைசாமி, கோகுல இந்திரா ஆகியோருடன் பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலில் இருந்து நேற்று பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது நைனியப்பன் தெருவில் உள்ள 59 ஆவது வட்டச் செயலாளர் மாரி அமைத்த தேர்தல் பணிமனையை திறந்து வைக்க வேண்டும் என மேயர் துரைசாமியிடம் அ.தி.மு.க வினர் கோரினர்.
ஆனால், மேயர் உள்ளிட்டோர் பணிமனையை திறந்து வைக்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. வினரின் பிரசாரம் தவறான வழிகாட்டுலில் நடந்து வருகிறது. கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களை கூட பிரசாரத்தில் மதிப்பதில்லை.
எந்த காரணத்திற்காக சிலருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதோ அவர்கள் அந்த பணியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இதே நிலை நீடித்தால் மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க.வினரின் ஓட்டு கூட கிடைக்காது என்று கூறியுள்ளனர்.