வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக கவுன்சிலர்
வேலூர்: வாணியம்பாடியில் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக கவுன்சிலர் ஜர்கீஸிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 87வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

நண்பகல் 12 மணிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் அகமது அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் வாக்காளர்களுக்கு அதிமுகவை சேர்ந்த 17வது வார்டு கவுன்சிலர் ஜர்கீஸ் பணம் அளித்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அகமது மற்றும் திமுகவினர் ஜர்கீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து ஜர்கீஸை பிடித்தபோது அவர் தப்பியோட முயன்றார். ஜர்கீஸை விடுவிக்குமாறு அங்கிருந்த அதிமுகவினர் தெரிவித்தனர். போலீசார் ஒரு வழியாக ஜர்கீஸை பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பணப் பட்டுவாடா தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications