அ.தி.மு.கவின் வெற்றி பண பலத்தால் கிடைத்தது: விஜயகாந்த்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவரின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் துயரங்கள் நீங்கிடும். லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி நடைபெறும்.
மோடிக்கு வாழ்த்து
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வறுமை ஒழியும். உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாறிடும் என்ற நம்பிக்கையோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நரேந்திர மோடிக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்று அணி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.கவிற்கு மாற்றாக இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
பணபலத்தால் வெற்றி
ஆளும் கட்சியினர் தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொது மக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும். இருந்த போதிலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தே.மு.தி.க தொடர்ந்து பணியாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.