அண்ணா நினைவுநாள்.. மெரினாவில் நாளை 144 தடை உத்தரவை மீறுகிறார்கள் சசிகலா, ஸ்டாலின்?
அண்ணா நினைவுநாளை அதிமுக, திமுக நாளை கடைபிடிக்கிறது. மெரினாவில் 144 தடை உத்தரவை மீறி சசிகலா, ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலர் சசிகலா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கட்சியினருடன் இணைந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி நினைவஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.
வரலாறு காணாத பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டுக்கான புரட்சி சென்னை மெரினாவில் நடைபெற்றது. இந்த புரட்சியை போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு முடிவுக்கு கொண்டு வந்தது.
144 தடை
இதனைத் தொடர்ந்து மீண்டும் மெரினாவில் புரட்சியாளர்கள் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-ந் தேதிவரை மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நினைவுநாள்
மெரினாவில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போன்றவை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
மெரினாவில் தடை
இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கட்சியினருடன் சசிகலா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். மெரினாவில் 4 பேர் ஒன்று கூடுவதற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறும் சசி, ஸ்டாலின்
இந்த நிலையில் தடையை மீறித்தான் நாளை சசிகலா, ஸ்டாலின் ஆகியோர் அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியை நடத்த உள்ளனர். அப்போது போலீசார் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.