'நண்பேன்டா'.... ஆளும் அதிமுக அரசுடன் கமுக்கமாக கை கோர்த்த திமுக- அம்பலப்படுத்திய ஓபிஎஸ்!
ஆளும் அதிமுக அரசுடன் கமுக்கமாக திமுக கைகோர்த்திருப்பதாக ஓபிஎஸ் சொல்வது உண்மைதானாம்.
சென்னை: ஆளும் அதிமுக அரசும் திமுகவும் கை கோர்த்திருப்பதாக ஓபிஎஸ் விமர்சித்தது உண்மையோ உண்மை என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
திமுக எம்.எல்.ஏக்கள் பலரும் கொங்கு அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். இது திமுக தலைமையை மிரள வைத்திருந்தது.
நிலைமை தலைகீழ்
அதிமுக அரசுடன் ரொம்பவே நெருக்கம் காட்டிய எம்.எல்.ஏக்களுக்கு திமுக தலைமையும் எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறாகிவிட்டதாம்.
திமுகவுக்கு தூது
திமுக தலைமையின் கோபம் தொடர்பாக அதிமுக தரப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் திமுக தலைமையையும் சரி செய்துவிட்டால் போச்சு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
நிபந்தனை
இதற்காக திமுக தலைமைக்கு மிக நெருக்கமான எம்.எல்.ஏ. மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். திமுக தரப்பில் என்ன கேட்டாலும் செய்து தர தயாராக இருக்கிறோம். ஆனால் ரொம்பவே அசைத்துப் பார்க்கும் வகையில் குற்றச்சாட்டுகளை மட்டும் வைக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் சமாதான புறாவிடம் சொல்லப்பட்ட செய்தி.
க்ரீன் சிக்னல்
பழைய பாசத்தில் அந்த எம்.எல்.ஏ.வும் என்னால் முடிந்ததை நிச்சயம் செய்கிறேன் என உறுதியளித்துவிட்டு அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அறிவாலயம் தரப்பில் இருந்தும் க்ரீன் சிக்னல் போயிருக்கிறது. இந்த நகர்வுகளை வைத்துதான் ஓபிஎஸ் பொதுக்கூட்ட மேடையில் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.