அப்போ பணம்?! ... எம்.எல்.ஏ சீட்டுக்கு கோடிகளில் கொட்டிய குமரி அதிமுகவினர் அதிர்ச்சி
சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜெயில் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் அரசியல்வாதிகளோ தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி குவித்துள்ளனர். அதிமுகவில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை எம்.எம்.ஏ சீட் வாங்கித்தருவதாக கூறி பணம் வசூல் நடந்துள்ள சம்பவம் கட்சித் தலைமையில் காதை எட்டியுள்ளது. குமரி மாவட்டத்திலும் குறைவில்லாமல் நடந்த விபரம் ரகசிய விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிட அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். யார் முதலில் வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களோ என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
எம்.எல்.ஏ சீட்டுக்காக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அக்கட்சியின் முக்கிய தலைவர்களிடம் எம்எல்ஏ சீட்டு கேட்டு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பணம் கொடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ சீட் பெற்றுத்தருவதாக கூறி நீலாங்கரை பங்களாவில் ரூம் போட்டு பணம் வசூலித்த அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கையோடு அவர்கள் கட்சியை விட்டும் கட்டம் கட்டப்பட்டனர்.
இப்போது பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் குமரி மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்து மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியது. அம்மாவத்தில் தொழிலதிபர்களும், சில நிர்வாகிகளும், அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களிள் தரகராக செயல்பட்டவரிடம் பலகோடி கொடுத்துள்ளதாகவும், அந்த தலைவர்கள் அனைவரும் ஓரம்கட்டப்பட்டதால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 சட்டசபை தொகுதிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2006 தேர்தலின் போது 7 சட்டசபை தொகுதிகள் இருந்தன. அதன்பின் மறுசீரமைப்பில் திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது. இதையடுத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் சட்டசபைத் தொகுதி 6ஆக சுருங்கியது.

அதிமுக வேட்பாளர் பட்டியல்
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்க கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், வரும் 23ம் தேதி பங்குனி உத்திரத்துக்கு முன், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரிடம் எந்த தொகுதி
கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளை அதிமுக தற்போது கைவசம் வைத்துள்ளது. குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பத்மநாபபுரம் தொகுதி திமுக வசம் உள்ளது. வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவது என்ற முடிவில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும், இதற்காக மக்கள் செல்வாக்கு மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பணம் பரிமாற்றம்
எப்படியும் எம்எல்ஏவாகி விடலாம் என கனவு கண்டு வரும் அதிமுகவினர் பலர், அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று கூறி இடைத்தரகராக செயல்பட்ட மாவட்ட நிர்வாகி ஒருவர் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இரு மாதங்களுக்கு முன்பே கொடுத்துள்ளனர். தற்போது கட்சி தலைமை அவர்களை ஓரம்கட்டியுள்ள நிலையில், மாவட்டம் வாரியாக அவர்களின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரகசிய ஆய்வு
திருநெல்வேலி வரை இந்த நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், இனி குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீது தான் நடவடி க்கை இருக்கும் என தெரிகிறது. இதற்காக கட்சி தலைமையின் விசுவாசமானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரகசியமாக முகாமிட்டு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

கைமாறிய பணம் எவ்வளவு
எம்.எல்.ஏ சீட்டுக்காக யார்? யார்? யாருக்கு எவ்வளவு தொகையை சட்டசபை தொகுதி தேர்தல் சீட்டுக்காக கொடுத்துள்ளார்கள், என்ற விபரத்தை ரகசியமாக இவர்கள் சேகரிக்க தொடங்கியுள்ளாராம். இது தொடர்பாக மேலிடத்தில் இருந்தும் போன் மூலம் விபரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளார்களாம்.
இதனால் பணம் கொடுத்தஅதிமுக நிர்வாகிகள் போன் எடுக்கவே அஞ்சி நடுங்குகிறார்களாம். பலரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார்களாம்.

முன்னாள் எம்எல்ஏவின் பரிதாப நிலை
முக்கிய அமைச்சர்கள் ஓரம்கட்டப்படுவார்கள் என்பதை கனவிலும் நினைக்காத நிலையில், அவர்களிடம் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாந்த அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இவர்களில் முதல் இடத்தில் இருப்பது, திமுகவில் எம்எல்ஏவாக இருந்து தற்போது அதிமுக வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்தான்.

மயங்கி விழுந்த எம்.எல்.ஏ
இவர் தனக்குள்ள மக்கள் பலத்தை பயன்படுத்தி எப்படியாவது ஜெயித்துவிடுவேன். என முக்கிய நிர்வாகியின் பின்னால் ஓராண்டுக்கும் மேலாக அலைந்து, சீட்டுக்காக காய் நகர்த்தியுள்ளார். முடிவில் நாகர்கோவில் தொகுதியை தனக்கு பெற்று தந்துவிடுமாறு கூறி, ரூ.1 கோடி வரை பணம் கொடுத்துள்ளார். பணம் இழந்த சோகத்தில் அவர் அடிக்கடி மயங்கி விழுவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் பரிதாபமாக உள்ளது.

பேரிடியில் பேராசிரியர்
இதுபோல், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிவிடவேண்டும் என்ற ஆசையில், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய ஒருவர், தனது தென்னந்தோப்பு மற்றும் சொத்துக் களை விற்று ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை இழந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவேயில்லை.

கல்லூரி அதிபர்
பத்மநாபபுரமோ, குளச்சலோ ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி அதிபர் ஒருவர் ரூ. 1 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார்.

நிதி நிறுவன நிர்வாகி
நிதி நிறுவனம் நடத்திவரும் நிர்வாகியோ ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார். இவர்கள் பெரும்பாலும் 3ம் இடத்தில் இருந்த வரை நம்பி பணம் கொடுத்தவர்கள். அவர் கட்சியில் ஓரம்கட்டப்பட்டதை எதிர்பார்க்காத இவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்
குளச்சல் தொகுதிக்கு சீட் வாங்குவதற்காக மீனவ பிரதிநிதி ஒருவர் ரூ. 25 லட்சம், விளவங் கோடு அல்லது பத்மநாபபுரம் தொகுதியைக் கேட்டு களியக் காவிளை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ரூ. 40 லட்சம், தக்கலை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 35 லட்சம், கிள்ளியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளனர்.

பணம் வந்தால் போதும்
இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட குமரி மாவட்ட முக்கிய புள்ளியிடம், கொடுத்த பணத்தில் பாதியையாவது திரும்ப வாங்கிக் கொடுக்குமாறும், அதன் பிறகு அரசியலும் வேண்டாம்.. கட்சியும் வேண்டாம்.. என்ற விரக்தியில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை பாயலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக, சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குமரி அதிமுக வட்டாரம் பெரும் பதற்றத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications