'அம்மா' விடுதலை.. தமிழகம் முழுவதும் "கட்டிங் + ஷேவிங்"கில் அதிமுகவினர் ரொம்பப் பிசி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகியுள்ளதைத் தொடர்ந்து அதிமுகவினர் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மொட்டை போட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது முதல்வர் பதவி, எம்.எல்.ஏ. பதவி ஆகியவற்றை இழந்து சிறைக்குப் போனார். பின்னர் சிரமப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மீண்டு வர வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தீவிர வழிபாடுகளில் இறங்கினர்.

அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சிப் பிரமுகர்கள் கோவில்களுக்கு முடி வளர்த்து நேர்ந்து கொண்டனர். பல அமைச்சர்கள் தாடியோடு உலா வந்தனர். பெரும்பாலான அதிமுகவினர் வேண்டுதல்களோடு வளைய வந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்குத் தாடியோடு காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவினர் தங்களது முடிகளை கோவில்களிலும், பொது இடங்களிலும் இறக்கி நேர்த்தி் கடனை செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே அதிமுக தொண்டர்கள் 8 பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் எம்ஜிஆர் மனோகரன் உட்பட ஏழு பேர் மொட்டை அடித்து நேர்த்திகடனை தீர்த்தனர். இதேபோல, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தமது ஆதரவாளர்களுடன் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திண்டுக்கல் அருகே உள்ள அகரம் சுக்காம்பட்டியில் அ.தி.மு.கவினர் அங்குள்ள காளியம்மன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அகரம் பேரூராட்சி துணைத்தலைவர் சக்திவேல் தலைமையில் 50 பேர் மொட்டை போட்டுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications