கலெக்டராக இருந்த ஊரில் தாசில்தாரா? முதல்வர் பதவிக்கு தொடர்ந்து குறிவைக்கும் ஓபிஎஸ்
அதிமுகவின் எடப்பாடி கோஷ்டி தமக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறாராம் ஓ. பன்னீர்செல்வம்.
சென்னை: அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியுடன் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் முதல்வர் பதவியை எப்படியும் பெற்றே ஆக வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.கவுக்குள் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். உண்மையில் ஓபிஎஸ் அணியுடன் இணைவதால் எடப்பாடிக்கு எந்த ஆதாயமும் கிடையாது.
ஏனெனில் கட்சிக்குள் வந்துவிட்டால் தன்னுடைய ஆதிக்கத்தைத்தான் ஓபிஎஸ் வெளிப்படுத்துவார். அதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரையில் பொறுமையாக இருப்போம் என்ற மனநிலையில் உள்ளது எடப்பாடி தரப்பு.
பொதுச்செயலர் ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு ஓபிஎஸ்ஸை முன்னிறுத்த வேண்டும் என மைத்ரேயனும் முனுசாமியும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், முதல்வர் பதவியைப் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார் ஓபிஎஸ்.
முதல்வர் பதவிக்கு குறி
கலெக்டராக இருந்த ஊரில் தாசில்தாராக இருக்க முடியுமா என்பதுபோல, பழனிசாமிக்குக் கீழே ஏதாவது ஒரு அமைச்சர் பதவியில் அமர்வதை அவர் விரும்பவில்லையாம். முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவி கிடைத்தால் போதும் எனவும் நினைக்கிறாரா, ஓபிஎஸ்.
பொதுச்செயலரானால்?
அப்படி ஓபிஎஸ் பொதுச்செயலராகிவிட்டால் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து நிலைகளிலும் கொண்டு வந்துவிடுவார். இதனால் அவர் சொல்வதைத்தான் அனைவரும் கேட்கக் கூடிய நிலை ஏற்படும்.
Recommended Video
சந்தேகிக்கும் கொங்கு கோஷ்டி
அதேபோல் ஓபிஎஸ் வசம் அதிமுக போனால் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்களில் யார் வேட்பாளர் என்பதை அவர்தான் முடிவு செய்வார். அடுத்து வரக் கூடிய சட்டசபை தேர்தலிலும் கூட எடப்பாடியை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தவும் அவர் விரும்ப மாட்டார் என சந்தேகப்படுகிறது கொங்கு கோஷ்டி.
இரட்டை இலைக்காக...
இதனால் இரட்டை இலை கிடைக்கும் வரை ஓபிஎஸ்-க்கு சாதகமாக பேசுவோம்... அதன்பின்னர் ஓபிஎஸ் கோஷ்டியை ஒதுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம் என்பது கொங்கு கோஷ்டியின் ப்ளான்.