ரிசார்ட்டில் தங்கி இருப்பது ஏன்? அமைச்சர் நிலோபர் கபில் விளக்கம்
யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி ரிசார்ட்டில் அடைத்து வைக்கவில்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகள் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருப்பதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதற்கிடை பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெண் எம்எல்ஏக்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், 124 சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. யாரும் எங்களை இங்கு அடைத்து வைக்கவும் இல்லை.
நான் முஸ்லிமாக இருந்தாலும் எனக்காக தனி மரியாதை தருவதுடன், 5 மணி நேரம் தொழுகை நடத்துவதற்காக தனி இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நாங்கள் ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications