கூவத்தூரில் போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு- சபாநாயகரிடம் சசி கோஷ்டி எம்.எல்.ஏ. புகார்
கூவத்தூரில் போலீசார் நடத்திய விசாரணைக்கு சசி கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ. இன்பதுரை புகார் தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் 8 நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து தப்பிய மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் எம்.எல்.ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனிலும் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். அதேபோல் எம்.எல்.ஏக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைக்கு சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ. இன்பதுரை எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஓபிஎஸ் தூண்டுதலில்தான் போலீசார் இப்படி நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது எம்.எல்.ஏக்களின் உரிமையை மீறும் நடவடிக்கை. இது குறித்து சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம் என கூறினார்.