ஆட்சி அதிகாரத்தை கொல்லைப்புறமாக கைப்பற்ற ஐம்புலன்களையும் அடக்கி அமர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி ஒரு கும்பலிடம் ஒப்படைக்க ஐம்புலன்களையும் பல மணிநேரமாக அடக்கி அமர்ந்திருந்த அதிமுக எம்.எல்.ஏக்களின் செயல்கள் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சட்டசபையில் சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்வைத்தது. ஆனால் திமுகவோ, கூவத்தூர் சிறையில் இருந்து நேரடியாக கைதிகளைப் போல அழைத்துவரப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை முதலில் தொகுதிக்கு அனுப்புங்கள். ஒருவாரம் கழித்து 'ரகசிய' வாக்கெடுப்பை நடத்தலாம் என வலியுறுத்தினர்.
நிராகரித்த சபாநாயகர்
ஆனால் சபாநாயகர் தனபாலோ இதை நிராகரித்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி வலியுறுத்தினர். இதில் பேப்பர்கள் கிழித்து வீசப்பட்டன; நாற்காலிகள் பறந்தன.
ஐம்புலன்களையும் அடக்கி...
இத்தனை களேபரத்துக்கு மத்தியில் சசி அணி எம்.எல்.ஏக்கள் ஐம்புலன்களையும் அடக்கி வைத்துக் கொண்டு மவுனிகளாக அமர்ந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும்; ஆட்சி அதிகாரத்தை ஒரு கும்பலிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோள் மட்டும்தான் இருந்தது.
சலனமற்றவர்கள்
11 நாட்களாக கூவத்தூர் உல்லாச விடுதியில் அடிமைகளாக அடைத்துவைக்கப்பட்டனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். இன்றும் கூட சட்டசபையில் இவ்வளவு களேபரம் நடந்ததும் சலனமற்றவர்களாக அமர்ந்திருந்த காட்சி மக்களை கொந்தளிக்க வைத்தது.
மக்கள் கொந்தளிப்பு
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக சொல்கிறது.. .அது வேண்டாம் அல்லது வேண்டும் என்ற கருத்தைக் கூட சொல்ல திராணியற்றவர்களாக அமர்ந்திருந்தனர். கூவத்தூர் அடிமைத்தனத்தை விட இது படுமோசமாக இருக்கிறதே என்பதுதான் பொதுமக்களின் கருத்து.