சசிகலா புஷ்பா விவகாரம்... 'கல்தா' கலக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!
சென்னை: சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக களம் இறங்கக் கூடும் என கண்காணிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை விரைவில் ராஜினாமா செய்ய அதிமுக மேலிடம் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா புஷ்பாவை அதிமுகவில் இருந்து நீக்கியதில் இருந்தே அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். சண்முகநாதன், நாராயண பெருமாள் ஆகியோர் சசிகலா புஷ்பாவின் உறவினர்கள்.

இவர்களிடம் இருந்த கட்சிப் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டுள்ளனர். ஒரேயடியாக இவர்களை தூக்கியடித்தால் நாடார் சமூகத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் மெதுமெதுவாக நடவடிக்கை எடுக்கிறதாம் போயஸ் கார்டன்.
தற்போது சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக தொழிலதிபர் மூலமாக களமிறங்கக் கூடும் என கருதப்படுகிற சில எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து வருகிறதாம் அதிமுக மேலிடம். அனேகமாக விரைவில் இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும் நிலையில் அத்தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்திவிடலாம் என்பதும் அதிமுக மேலிடத்தின் திட்டமாம்.
அப்படி ஜெயலலிதா உத்தரவிட்டால் அந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்களா? சசிகலா புஷ்பா போல எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்பார்களா? என்பதுதான் கிளைமாக்ஸாம்.












Click it and Unblock the Notifications