எங்களை விட்டு அதிமுக விலகியதற்கான காரணம் போகப் போகத்தான் தெரியும்- ஜி.ரா.
சென்னை: எங்களுடன் அதிமுக கூட்டணி வைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத்தான் தெரியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக்கொள்கைகளை கம்பீரமாக முன்னெடுத்துச்செல்லும் வகையில் இந்த தேர்தல் களத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், வெண்மணி நினைவாலயத் திறப்புவிழாவில் அறிவித்த போது, கூடியிருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் கைதட்டல் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆனது.
2 இடதுசாரிக்கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன என்ற செய்தி 2 கட்சிகளின் அணிகள் மத்தியில் மட்டுமல்ல, இடதுசாரி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இடதுசாரி கட்சிகளுடன் அதிமுக தலைமை உடன்பாட்டிற்கு வராததற்கான உண்மையான காரணத்தை இன்னும் அந்த கட்சித்தலைமை அறிவிக்கவில்லை.
இடதுசாரிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கீடு செய்வது என்ற எண்ணிக்கைதான் காரணமா?. அல்லது வேறு அரசியல் நோக்கம் காரணமா? என்பதை இப்போது அறுதியிட்டுக் கூற முடியாது என்றாலும் போகப்போகப் புரியும். இதுகுறித்து பல்வேறு யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அடுத்த சில தினங்களில் 2 கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதோடு, போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளன.
நாட்டின் விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பிறகு மக்கள் நலனுக்காகவும் எண்ணற்ற இயக்கங்கள் நடத்தி, அளப்பரிய தியாகங்களைச் செய்த இடதுசாரிகள் மக்களவைத் தேர்தலை இணைந்து சந்திப்பது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.