மாட்டிறைச்சி தடை.. அதிமுகவிற்கு பிடிக்கலயாம்.. அரசு முடிவு தெரியலையாம்.. தம்பிதுரை கிரேட் எஸ்கேப்
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடையில் அதிமுக அம்மா கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று அக்கட்சியின் எம்பியான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைப் பற்றி தமிழகத்தை ஆளும் அதிமுக அம்மா கட்சியினர் வாயே திறக்கவில்லை. இந்நிலையில், இன்ற டெல்லியில் லோக் சபா துணை சபா நாயகரும் அதிமுக அம்மா கட்சியின் எம்பியுமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாட்டிறைச்சி தடை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடையில் அதிமுகவிற்கு உடன்பாடு கிடையாது. மாட்டிறைச்சி தடையை அனைவரும் எதிர்க்கின்றனர். மக்கள் உணர்விற்கு மதிப்பளிக்க வேண்டும். அதன்படி அதிமுக செயல்படும்.
தமிழக அரசு
தமிழக அரசு இதுபற்றி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுத்து சொல்ல வேண்டும். தனிப்பட்ட என்னால் சொல்ல முடியாது.
நடவடிக்கை
மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக ஐஐடி மாணவர் தாக்கப்பட்டது தவறு. யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
நிலுவைத் தொகை
தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை வழங்குமாறு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசியுள்ளோம். விரைவில் தொகை கிடைக்கம் வாய்ப்புள்ளது என தம்பிதுரை தெரிவித்தார்.