அம்மா சோபாவில் சசிகலா அமருவதா?- கொந்தளிக்கும் கொங்கு மண்டல அதிமுக தொண்டர்கள்
அம்மாவை வச்சு பார்த்த இடத்தில யாரோ ஒருத்தரை வச்சு பார்க்க மனசு ஒப்பலைங்க... இனி நான் அரசியல்ல இருக்க மாட்டேன் என்பதுதான் பல அதிமுக பெண் தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் அதிமுக பெண் தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 16 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கிராமங்களில் ஜெயலலிதாவின் படத்திற்கு படையல் போட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னைக்கு பஸ் ஏறி மெரீனா கடற்கரைக்கு வருகின்றனர் ஏராளமான தொண்டர்கள்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவர் வாழ்ந்த போயஸ் கார்டனுக்கும் செல்கின்றனர்.

கோவில் போல தொட்டு கும்பிட்டு கண்ணீர் மல்க வணங்கி செல்கின்றனர் தொண்டர்கள். இதனால் போயஸ் தோட்ட வீடு உள்ள பகுதி தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.
போயஸ் தோட்ட இல்லம்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அனைவரும் பார்க்கும்படி நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
போயஸ் கார்டன் வீட்டிற்கு உள்ளே சென்று சில தினங்களுக்கு முன் தொண்டர்கள் சென்று பார்க்க அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக வருவதால் தொண்டர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
நாங்க பார்க்க கூடாதா?
இன்று ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுகவினர் சிலர், போயஸ் கார்டன் உள்ளே சென்று பார்க்கலாம் என சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பெண் நிர்வாகிகள் பலரும் கோபம் கொண்டு கொந்தளித்தனர். அம்மா வாழ்ந்த வீட்டை நாங்கள் பார்க்கக் கூடாதா. எங்களைப் போன்ற தொண்டர்கள் உண்மையானவர்கள். தொண்டர்கள் யாரும் அம்மாவை மறக்கமாட்டர்கள். என்றும் மாறப்போவதில்லை என்றனர்.
யாரு இடத்தில் யாரு அமர்வது
அம்மாவுக்கு இணையாக யாரும் கிடையாது. அம்மா சோஃபாவில் சசிகலா உட்காருவதா? அம்மா இருந்தபோது உட்கார்ந்தாரா. அம்மா வீட்டில் இவர்களுக்கு என்ன வேலை என்று பெண் தொண்டர்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மா வாழ்ந்த வீட்டில் வசிக்கவும், சோபாவில் உட்காரவுமே எதிர்க்கும் தொண்டர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராகவோ, முதல்வராகவோ ஏற்றுக்கொள்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications