தேர்தலில் போட்டியிட விரும்பும் "சசிகலா"... கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார்!
சென்னை: சென்னை அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்துள்ள, மறைந்த அதிமுக நகர செயலாளர் எம்.ஆர்.ரவியின் மனைவி சசிகலா, தனக்கு சொந்தக் கட்சியில் இருந்தே கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் அதிமுக நகர செயலாளராக பதவி வகித்தவர் எம்.ஆர்.ரவி. இவர் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். ரவியின் உடலுக்கு ஜெயலலிதாவே நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அந்தளவிற்கு கட்சியில் முக்கிய இடத்தில் இருந்தவர் ரவி.
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, தேர்தலில் போட்டியிட விரும்பும் தன்னை அதிமுகவினரே கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக ரவியின் மனைவி சசிகலா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் சசிகலா கூறியிருப்பதாவது:-

கட்சிக்காக வாழ்ந்தார்...
என்னுடைய கணவர் ரவியின் இழப்பு எங்கள் குடும்பத்தினரால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும். இறுதி மூச்சு வரை கட்சிக்காகவே அவர் வாழ்ந்தார். அ.தி.மு.க.வுக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்.

ஜெ. உதவி...
அவரது இறப்புக்கு வந்த அம்மா எனக்கும், என் குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறியதோடு என்னுடைய மகள் கல்விக்கு உதவி செய்தார். இன்று அவள் ஒரு டாக்டராக இருப்பதற்கு அம்மாவே காரணம். அவர் விட்டுச் சென்ற கட்சிப் பணியை தொடர்ந்து வருகிறேன்.

சமூகப்பணி...
அதோடு மக்களுக்கான சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். சமீபத்தில் சென்னையை புரட்டிப் போன மழை வெள்ளத்தின் போது பல்வேறு உதவிகளை தனியாக செய்துள்ளேன்.

காத்திருக்கிறேன்...
கட்சியில் பொதுக்குழு உறுப்பினர் என பதவிகளைக் கேட்டு பலதடவை விருப்பம் தெரிவித்தும் எனக்கு எந்தவித பதவிகளும் தரப்படவில்லை. இருப்பினும் பதவிகள் இல்லாமல் கட்சிப் பணிகளை செய்து வருகிறேன். பத்து வருஷமா அம்மாவை சந்திக்க முயற்சி செய்கிறேன். ஆனால் அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

போனில் மிரட்டல்...
கடந்த உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலின் போது அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தேன். ஆனால் கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிட நான், விருப்ப மனு தாக்கல் செய்தவுடன் என்னுடைய செல்போனுக்கு மிரட்டல் கால்கள் வரும். அதில் பேசும் ஆண் குரல், 'என்ன கட்சிக்கு வரப்போகிறீர்களா? உன்னுடைய கணவன் போன பரலோகத்துக்கு நீயும் போய்விடுவாய். ஒழுங்காக பிள்ளைகளைப் பார்த்துட்டு இரு. அதவிட்டுட்டு கட்சிப்பணி, தேர்தலில் போட்டியிட முயற்சித்தால் அவ்வளவு தான்' என்று மிரட்டி விட்டு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். இது ஒருமுறை அல்ல பலதடவை எனக்கு மிரட்டல் வந்துள்ளது. எங்கிருந்து மிரட்டல் கால்கள் வருகிறது என்று விசாரித்தால் பார்வையற்றோர் வைத்திருக்கும் பொது தொலைபேசி இணைப்பிலிருந்து வந்தது தெரிந்தது.
அம்பத்தூரில் விருப்பமனுத்தாக்கல்...
மிரட்டல் கால்களை பதிவு செய்யாததால் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. இந்த முறையும் அம்பத்தூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட தலைமை கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தேன். அடுத்த நாளே எனக்கு மிரட்டல் போன் கால் வந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் மிரட்டல் விடுவது மட்டும் எனக்கு தெரிகிறது. அவர்கள் யார் என்பது தெரியவில்லை. அம்மா என் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த முறை எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெற்று அதை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications