சகாயம் அலுவலகத்திற்குள் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்த அதிமுக மாஜி மாவட்டச் செயலாளர்
மதுரை: மதுரை கிரானைட் மோசடி வழக்கை விசாரித்து வரும் சகாயம் அலுவலகத்திற்குள் இன்று முன்னாள் அதிமுக மாஜி மாவட்டச் செயலாளர் ஒருவர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாக கட்டிடத்தில் அவரது அலுவலகம் செயல்படுகிறது. விசாரணை தொடங்கியது முதல் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையிலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதங்கள் வந்தன. இதுகுறித்து சகாயம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சகாயத்திற்கு ஏற்கனவே 3 போலீசார் பாதுகாப்பாக உடன் வந்தனர். தற்போது எந்திர துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ்காரர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மதுரையில் இன்று சகாயம் அவரது குழுவினருடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது எந்த வித முன் அனுமதியும் இல்லாமல் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மச்சக்குமார் என்பவர் திடீரென நுழைந்தார். அப்போது அருகில் இருந்த போலீசார் ஓடிவந்து, முன் அனுமதியில்லாமல் பார்க்க முடியாது என்று மறுத்து தடுத்து அவரை அப்புறப்படுத்தினர்.
ஆனாலும் அவர் சகாயத்தை சந்திக்க வேண்டும் என்றார். இருப்பினும் அவரை விடாமல் போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து அறிந்த மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், அவர் அனுமதியில்லாமல் யாரையும் சந்திக்க விடவேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications