வாக்கு எண்ணும்போது அதிகாரிகள் மூலம் முறைகேடு செய்ய அதிமுக திட்டம்: அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி: வாக்குகளை எண்ணும்போது வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் மூலமே முறைகேடு செய்ய ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 24ம் தேதி அமைதியான முறையில் நடந்தது. 75 சதவீத வாக்குகள் பதிவான தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தேசிய அளவில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மோடி பிரதமர் ஆவார்.
தேர்தல் நேரத்தில் அதிமுக வரலாறு காணாத அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவு அதிமுக பணப்பட்டுவாடா செய்யத் தான் உதவியது. தடை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் வியாபாரிகள், பொதுமக்கள் எடுத்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்தது. ஆனால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகோ பணப்பட்டுவாடா நடந்தும் எங்குமே பணம் பறிமுதல் செய்யப்படவில்லை.
தர்மபுரியில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு பல முறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஐந்தரை கோடி வாக்காளர்களில் நான்கரை கோடி பேருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குகளை எண்ணும்போது வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் மூலமே முறைகேடு செய்ய ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
என் மீதும், எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மீதும் தொடரப்பட்ட பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications