அது அவங்க கையில்தான் உள்ளது, எங்க கிட்ட ஏதுமில்லை.. தமிழிசை
அதிமுக ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
நெல்லை: அதிமுக அரசு தங்கள் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வது என்பது ஆட்சியாளர்களான அவர்களின் கையில்தான் உள்ளதே தவிர இதில் பாஜக செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
அதிமுகவின் ஓராண்டு ஆட்சிக் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நெல்லையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஓராண்டில் அதிமுக இரண்டாக உடைந்ததுதான் மிச்சம்.

மத்திய அமைச்சர்கள் 3 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிடுகின்றனரோ அதுபோல் தமிழக அமைச்சர்களும் தாங்கள் ஓராண்டில் மேற்கொண்ட சாதனைகளை பட்டியலிடுங்கள்.
அப்போதுதான் பொதுமக்களுக்கு என்னென்ன செய்தீர்கள், இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வரும். அதிமுகவின் இரு அணிகளும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறான தகவலாகும்.
தற்போது ஓராண்டு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 4 ஆண்டுகளையும் அதிமுக அரசு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அந்த 4 ஆண்டுகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்றால் அது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் தேர்தலை கொண்டுவரும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications