அதிமுகவின் இரு அணிகளும் சரியான நேரத்தில் இணையுமாம்.. சொல்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சரியான சூழ்நிலை வரும் போது இணையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கடலூர்: அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் சரியான சூழ்நிலை வரும் போது இணையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளும் தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேச்சு அடிபட்டு வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தரப்பிலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் குழுக்களும் அமைக்கப்பட்டன. இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
தங்களது முக்கிய 2 கோரிக்கைகளான சசிகலா குடும்பத்தை அதிமுகவைவிட்டு வெளியேற்றுவது மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவதை உறுதி செய்யதால் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வோம் என ஓ.பி.எஸ். அணி உறுதியாக உள்ளது.
இதனிடையே தொண்டர்களை சந்தித்து தங்களது அணியை பலப்படுத்த சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் நிர்வாகிகள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என எடப்பாடி பழனிச்சாமியும் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சரியான சூழ்நிலை வரும் போது இணையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்னர் இரு அணிகளாக, இரு சின்னங்களில் செயல்பட்டோம். அதன்பிறகு 2 அணிகளும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை பெற்று வெற்றி பெற்றோம். அதேபோல் தற்போதும் 2 அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications