வெள்ள நிவாரணமும்... ஸ்டிக்கர் அரசியலும்....: அடங்காத அதிமுக, தடை விதித்த திமுக
சென்னை: எங்கும் அம்மா... எதிலும் அம்மா என்பதுதான் அதிமுகவினரின் தாரக மந்திரம். அரசு வழங்கும் நிவாரணப்பொருட்கள் அனைத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் படமின்றி இருக்காது. தன்னார்வலர்கள் வழங்கும் பொருட்களிலும் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கியதால் சர்ச்சையோடு மக்களின் கடும் கோபமும் சீறி எழுந்த நிலையில் சுதாரித்த திமுக தனது நிவாரண பணிகளை விளம்பரமின்றி செய்து வருகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவினர் ஜெயலலிதா படத்துடன்தான் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களில் அதிமுக, திமுகவினர் தங்கள் தலைவர்களின் படங்களை அச்சிட்டு விநியோகித்து வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, திமுகவினர் வழங்கும் நிவாரணப் பொருட்களில் தலைவர்களின் படங்கள் இருக்ககூடாது என்று ஸ்டாலின் தடை விதித்து விட்டராம்.

ஸ்டிக்கர் அரசியல்
சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழகம், மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் உதவி வருகிறார்கள். உதவி பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை மறித்து, அதில் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை அதிமுகவினர் ஒட்டி வருவதாக கடும் புகார் எழுந்தது. திமுகவினர் வழங்கிய நிவாரணப் பொருட்களிலும் ஸ்டாலின், கருணாநிதி படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

தடை போட்ட ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து, திமுகவினர் வழங்கும் வெள்ள நிவாரண நிகழ்ச்சிகளில் கட்சி கொடி, தலைவர்கள் படங்கள் ஏன் கருப்பு சிவப்பு கலர் கூட இருக்ககூடாது என ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து எழும்பூர், புதுப்பேட்டை பகுதியில் திமுகவினர் நடத்திய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் அடக்கி வாசித்தனர். அங்கு திமுக கொடியோ, பொருட்களில் கருணாநிதி, ஸ்டாலின் படமோ இல்லை.

அதிமுகவினர் தொடரும் அம்மா
இந்நிலையில், அதிமுக சார்பாக வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னச்சாமி மேற்பார்வையில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொட்டலங்களில் அனைத்திலும் முதல்வர் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.

போட்டா போட்டி
ஆர்.கே.நகர் பகுதியில் இன்று அதிமுகவினர் பாய், போர்வை, நைட்டி, டி-சார்ட், கைலி, குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் பால்பவுடர் ஆகிய ஏழு பொருட்கள் அடங்கிய ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர். முதல்வர் தொகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியதையடுத்து போட்டி போட்டுக்கொண்டு இப்போது அதிமுகவினர் கவனித்து வருகின்றனர்.

நிவாரணத்தில் கலர் வேண்டாம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடலூரில் நிவாரணம் வழங்கிய போதும் எந்த வித கட்சி அடையாளம் இன்றியே நிவாரண பொருட்களை அளித்துள்ளார். சென்னையில் நிவாரணம் வழங்கிய போதும் கறுப்பு சிவப்பு வர்ணம் கூட இல்லாத வகையில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அனைத்திலும் அம்மாதான்
சென்னை கீழ் நடுவங்கரை பகுதியில் உள்ள இந்திரா நகர் மற்றும் நாதமுனி தெருவில் வசிக்கும் 500 மக்களுக்கு அமைச்சர் கோகுல இந்திரா, முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை வழங்கினார். இது மட்டுமல்லாது அமைச்சர் எஸ்.பி வேலுமணி மேற்பார்வையில் தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம், பி.டி.சி. காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களிலும் முதல்வரின் படம் தவறாமல் அச்சிடப்பட்டிருந்தது .












Click it and Unblock the Notifications