அரைகுறை ஆடை, கையில் மதுவுடன் பெண்: சென்னை பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை
சென்னை: மது கோப்பையை கையில் பிடித்தபடி, பெண் ஒருவர் ஏகாந்தமாக இருப்பதுபோன்ற காட்சியை சென்னை கோட்டூர்புரம் பஸ் நிறுத்தத்தில் விளம்பரமாக வைத்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகேயுள்ள கோட்டூர்புரம் பஸ் நிறுத்தத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் வந்து பஸ் ஏறுகிறார்கள். இந்த பஸ் நிறுத்தத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வைத்துள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில் அரை குறை ஆடையுடன் பெண் ஒருவர் கையில் மது கோப்பையை ஏந்தியபடி ஏகாந்தமாக இருப்பது போன்ற காட்சி உள்ளது.
இது தமிழக கலாசாரத்திற்கு விரோதமானது என்றும், உல்லாச போக பொருளாக பெண்ணை பார்க்கும் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்றும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
அகில இந்திய மாதர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் வனஜா இதுகுறித்து கூறுகையில், "பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற விளம்பரத்தை சென்னை மாநகராட்சி அகற்ற வேண்டும். அல்லது பேனர் இருக்கும் இடத்தில் தீயிட்டு கொழுத்துவோம்" என்றார்.
பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாந்தகுமாரி கூறுகையில், "அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் மது கோப்பையுடன் ஏகாந்தமாக நிற்பது போன்ற காட்சி, பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை மாநகராட்சியோ, அரசோ அனுமதிக்க கூடாது" என்றார்.
இதேபோன்ற விளம்பரம் சோழிங்கநல்லூர், ராஜிவ்காந்தி நெடுஞ்சாலை சோதனை சாவடியின் மேற்புரத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications