தந்தையின் கண் முன்னே பைக் விபத்தில் உயிரிழந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர்!
திருவள்ளூர்: திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தந்தை கண் எதிரேயே தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகள் ஸ்ரீமதி. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.
ஸ்ரீமதியை தினமும் அவரது தந்தை தாஸ் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடுவது வழக்கம். அங்கிருந்து அவர் மின்சார ரயிலில் சென்னைக்கு சென்று வந்தார். வழக்கம்போல் நேற்று காலை ஸ்ரீமதியை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதற்காக தாஸ் தனது மோட்டார் சைக்கிளில் அவரை கூட்டிச்சென்றார்.
திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையான ஜே.என்.சாலையில் சென்ற போது பின்னால் சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்தார்கள்.
அப்போது கண்டெய்னர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதால் தனது தந்தையின் கண் எதிரிலேயே ஸ்ரீமதி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். லேசான காயத்துடன் தாஸ், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி தாஸ் கொடுத்த புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.