பெண் சர்ச்சையில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக அமைச்சர்கள்... சுந்தரராஜின் பதவி பறிபோகுமா?
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தனது 2வது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டு பதவியை இழந்தார். இந்த நிலையில் மாணவியர் விடுதியில் இரவில் சென்று மாணவிகளைத் தொட்டுப் பேசி வில்லங்கமான கேள்விகளைக் கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ். இதனால் அவரது பதவி பறி போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள விளையாட்டு வீராங்கனைகளுக்கான உறைவிட பள்ளியின் விடுதியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ் இரவு நேரத்தில் ஆய்வு செய்ததுடன் மாணவி ஒருவரின் டிசர்ட்டை பிடித்து இழுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் விளையாட்டு வீராங்கனைகளுக்கான உறைவிட பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் மாணவிகள் விடுதிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ் இரவு நேரத்தில் திடீர் என சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இரவில் மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அமைச்சர் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். அப்போது ஒரு மாணவியிடம் உன்னிடம் மொத்தம் எத்தனை பனியன் உள்ளது என்று கேட்டு அவரது டிசர்ட்டை பிடித்து இழுத்துள்ளார்.
மற்றொரு மாணவியிடம் ஹாக்கி வீராங்கனையை பார்த்தாலே தெரியும். நீ நல்லா சாப்பிட்டு குண்டாக இருக்கிறாய் என்றார். அவர் மாணவிகளை மிரட்டுவது போன்று பல சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டார். மேலும் ஒரு மாணவியிடம் உங்க அப்பா செத்துப் போயிட்டாரா அல்லது வெளில போயிட்டாரா என்று மோசமாக கேட்கிறார்.
இதனால் மாணவிகள் பதில் அளிக்க முடியாமல் திணறினர். இதை பார்த்து அமைச்சருடன் வந்த அதிகாரிகளும் முகம் சுளித்தனர். அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பால் வளத்துறை அமைச்சராக இருந்த பி.வி. ரமணா ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவரது அமைச்சர் பதவி பறிபோனது. தற்போது அமைச்சர் பதவியை இழந்த டி.கே.எம். சின்னையாவும் பெண் விவகாரத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அமைச்சர் சுந்தரராஜ் மாணவி ஒருவரின் டி-சர்ட்டை பிடித்து இழுத்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வர் ஜெயலலிததா அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்கையில் அமைச்சர் சுந்தரராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் ஜெயலலிதா கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க சுந்தரராஜின் அமைச்சர் பதவியை பறிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் பிற கட்சியினர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications