சொல்லியடிக்கும் மோடி..சென்னை வரும் முன்பே தமிழில் கெத்து காட்டிய பிரதமர்! ட்விட்டரை கவனிச்சீங்களா?
சென்னை: பிரதமர் மோடி ரூ.2,467 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட சென்னை புதிய விமான நிலைய முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் திட்டம் உள்பட பலவற்றை இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக சென்னை வருகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ் மொழியில் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டு கெத்து காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். இன்று ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ரூ.2,467 கோடி மதிப்பிலான திட்டமான புதிய விமான நிலைய முனையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.

அதன்பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் சேவையை பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
இதுதவிர பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். மோடி வருகைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து மோடிக்கு கருப்பு கொடி காட்டவும், கருப்பு பலூன்கள் பறக்கவிடவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி சென்னை வருகைக்கு முன்பே தமிழ் மொழியில் கெத்து காட்டி அசத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை நிகழ்ச்சி நிரல் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதில் ‛‛சென்னையில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த சென்னை சுற்றுப்பயணம் இன்று மாலை 7.30 மணியுடன் முடிவடைய உள்ளது. அதன்பிறகு அவர் இரவு 7.45 மணியளவில் சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் புறப்பட்டு செல்ல உள்ளார். இரவில் மைசூரில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, நாளை காலை ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார். அங்கு தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்தின் ஹீரோக்களான யானை வளர்ப்பு தம்பதி பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications