ஒதுக்கப்பட்ட' சசி,தினகரனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு! திகிலில் எடப்பாடி கோஷ்டி!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவையும்,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனையும் அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அக்கட்சி
சென்னை: பெங்களூரு மற்றும் டெல்லி திகார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 'அதிமுக'வால் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் சசிகலாவையும் தினகரனையும் எம்.எல்.ஏக்கள் திடீரென சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் சில மாதங்கள் கட்சிக்குத் தலைமையேற்று இருந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு,இந்திய தேர்தல் கமிஷனால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது.அதை மீண்டும் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மாட்டிக்கொண்ட டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் இப்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா கட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை நிலைய செயலாளர் என்ற முறையில் கட்சியை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.அ.தி.மு.கவில் உள்ள பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு மீண்டும் பழைய அ.தி.மு.கவாக மாறவேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இணைப்பில் சுணக்கம்
இதனையடுத்து, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருந்ததால் இரு அணிகளும் இணைவதற்கான முயற்சி முதலில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இப்போது அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் நிபந்தனைகள்
'ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து அடியோடு நீக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 2 நிபந்தனைகளை முன் வைத்ததால், இணைப்பு முயற்சி பேச்சு வார்த்தை நடக்காமலேயே ஆரம்ப கட்டத்திலேயே முறிந்து விட்டது. இப்போது பேச்சுவார்த்தை நடக்காது என்ற நிலை வந்துவிட்டது.

அபிடவிட் மும்முரம்
அ.தி.மு.க. அம்மா அணிக்கு பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தலைமை நிலைய செயலாளர் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அபிடவிட் திருத்தம் செய்து தேர்தல் கமிஷனில் கொடுக்க,அ.தி.மு.க. அம்மா அணி ஏற்பாடு செய்து வருகிறது. இன்னமும் இந்த கையெழுத்து வேட்டை தொடருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல். ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கடந்த 5ம் தேதி டெல்லி சென்று திகார் ஜெயிலில் உள்ள தினகரனை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளனர். இதேபோல் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவையும் சனியன்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார்.இது அ.தி.மு.கவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொல்வதற்கு ஒன்றுமில்லை
இதுகுறித்து கருத்துக்கூறியுள்ள வெற்றிவேல் எம்.எல்.ஏ.,"கட்சியின் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளரை தொண்டன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக பார்த்து, நலம் விசாரித்து விட்டு வந்தேன். ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவன் நான். இப்போது ஆர்.கே. நகரில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்காகவும் கடுமையாக உழைத்தவன் நான். கட்சி தொண்டர் என்ற உரிமையில் சென்று பார்த்தேன். பேசினேன். அவ்வளவுதான். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி புறக்கணிப்பு?
அதே போல, தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட,இளைஞர் பெருவிழாவைப் புறக்கணித்து விட்டு,டெல்லி சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து வந்துள்ளார்.இது அப்போதே முதல்வர் தரப்பிற்கு படபடப்பை உண்டாக்கியிருந்தது.

சசி பிடியில் அதிமுக
இந்த சந்திப்புகள் பற்றி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்," சசிகலா- தினகரனை ஒதுக்கி வைத்ததாக அ.தி.மு.க. அம்மா அணியினர் கூறிவந்தது உண்மை என்றால் இவர்களிடம் கட்சித் தலைமை விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க. அம்மா கட்சி இன்னும் சசிகலா, டி.டி.வி. தினகரன் மேற்பார்வையில் தான் நடைபெறுகிறது என்பதை இந்த சந்திப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.இதனை தொண்டர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால்தான் தொண்டர்களை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்" என்று கூறினர்.












Click it and Unblock the Notifications