பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் காலருகே வந்து விழுந்த கல்.. திருச்சி அருகே பரபரப்பு
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிகழ்ச்சியில் பேசும்போது, கூட்டத்திலிருந்து 3 கற்கள் வந்தன. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் அருகே வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பகுதியில், நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்தவரான அமைச்சர் வளர்மதி, திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்தவரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருவரும் பங்கேற்றனர்.

பறந்து வந்த கற்கள்
இந்த கூட்டத்தில், வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, கூட்டத்திலிருந்து 3 கற்கள் வந்தன. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் அருகே வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர்களின் ஆதரவாளர்கள் கல் வந்த திசை நோக்கி ஓடிச்சென்றனர். ஆனால் வீசியது யார் என்பது தெரியவில்லை.

சசிகலாதான்
இந்த கல் வீச்சில் யாரும் காயம் அடையவில்லை. இந்த பரபரப்புக்கு மத்தியில் வீராவேசமானார் அமைச்சர் நடராஜன், எங்களை எப்படி மிரட்டினாலும், அதிமுக பொதுச்செயலர் சசிகலா தான் என அவர் முழங்கினார். இதையடுத்து அவசரமாக பேச்சை முடித்து கிளம்பினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

கூட்டம் இல்லை
இந்த பொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவர்களில் முக்கால்வாசி பேர் பெண்களாகும். ஏனெனில், இலவசமாக சேலை கொடுக்கிறோம் என கூறி பெண்களுக்கு ஆசை காட்டி அழைத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ரத்து
முன்னதாக, சேம்பரசம் பேட்டை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் அதிமுகவினர். ஆனால் அந்த பகுதி மக்கள் கொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்ததால் இரு அமைச்சர்களும் அந்த நிகழ்ச்சி ரத்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபா பேரவை எதிர்ப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர், துவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றபோது, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில், 37 பேர் கறுப்பு சட்டையுடன், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications