'கலைஞர் கருணாநிதிக்கு' அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்!
Recommended Video

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாகவும், பாராளுமன்ற பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவும், சொற்பொழிவாளராகவும், உலகம் மதிக்கும் ஒப்பற்ற தலைவராகவும் திகழ்ந்த, பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கும், முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவரும், இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக பதவி வகித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கவரும், அரசியல் அனுபவம் மிக்கவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்த, பலநூறு சகோதர சகோதரிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உள்ளிட்ட மறைந்த கழக உடன்பிறப்புகளும் (அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன), இந்த செயற்குழு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருணாநிதியுடன் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மோதல் போக்கு கொண்டிருந்தார். கருணாநிதி மறைந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அதிமுக அரசு மறுத்தது. இத்தனைக்கு நடுவே, கலைஞர் என்ற அடைமொழியுடன், அதிமுக செயற்குழுவில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications