காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு சுணக்கம் காட்டுவது ஏன் ? கருணாநிதி
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அ.தி.மு.க. அரசு சுணக்கம் காட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபற்றி தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், வீரப்பன், "ரிப்போர்ட்டர்" இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது என்ற நோக்கில் ஐந்து நீர்த் தேக்கங்களை காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் கட்டி ஏறக்குறைய 70 டி.எம்.சி. தண்ணீரைப் பதுக்கி வைத்துள்ளது கர்நாடகம். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக தனது பாசனப் பரப்பளவையும் விரிவுபடுத்தியுள்ளது" என்றெல்லாம் விளக்கியிருக்கிறார்.

இந்த விளக்கத்திலுள்ள உண்மை நிலவரங்களை அறிந்து, நியாயமான நீர்ப் பகிர்வுக்கு ஆணையிடும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டால்தான் காவிரிப் பிரச்சினை பெருமளவுக்குத் தீரும் நிலை உருவாகும்.
காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்புகளை உருவாக்கிட, மத்திய அரசு அரசியல் காரணத்திற்காக காலம் தாழ்த்தி வருகிறது; மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அ.தி.மு.க. அரசு சுணக்கம் காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications