மன்னிப்பு கேட்ட குமரகுருவுக்கு முன்ஜாமீன்.. வழக்கை வாபஸ் பெறவும் நீதிபதி அறிவுரை
கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசியதற்கு கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உளுந்தூர்ப்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மந்தைவெளி என்ற இடத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரையும், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீது பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அரசியல் உள் நோக்கத்தோடு, தொடரப்பட்ட வழக்கு என்றும், எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அவருக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி எந்த இடத்தில் மேற்கண்டவர்களை அவதூறாக பேசினாரோ அந்த இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை அதிமுக கூட்டம் நகரச் செயலாளர் பாபு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய போது உதயநிதி ஸ்டாலின் பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூகவலைதளங்களில் வருத்தம் தெரிவித்தேன்.
அதை பத்திரிகை தொலைகாட்சியில் வெளியிட்டுள்ளனர், நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுமா, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குமரகுரு தரப்பில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோரியதாக கூறி, அதுதொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையேற்று குமரகுருவிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதால், இந்த புகாரை வாபஸ் பெறலாம் என பரிந்துரை செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கொள்கை முடிவு என்ற அடிப்படையில் அவற்றை வாபஸ் பெறுவதே வழக்கமாக உள்ளதால், இந்த பரிந்துரையை வழங்குவதாகவும், ஆனால் அதன் இறுதி முடிவை அரசின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications