முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர் தீக்குளிப்பு... தாம்பரத்தில் பரபரப்பு
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வேண்டி சென்னையை அடுத்த தாம்பரம் அருகே அதிமுக தொண்டர் சற்குணம் என்பவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டி, மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பல வகையான நேர்த்திக் கடன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர். இதுபோல வேதனையடைந்த அதிமுக தொண்டர் சற்குணம் என்பவர், இன்று தாம்பரத்தை அடுத்த மெப்ஸ் சிக்னல் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். தீக்காயம் அடைந்த சற்குணத்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.