தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
நெல்லை: சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என ஜெயலலிதா பேரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதேவேளை கட்சியின் அதிகாரமிக்க பொதுச்செயலாளராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தம்மை பொதுச்செயலராக்க முயற்சிக்கிறார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தருகின்றனர். ஆனால் தொண்டர்கள் எதிர்க்கின்றனர்.
இந்தநிலையில் சசிகலா முதல்வராக வரவேண்டும் என ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று ஜெயலலிதா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்னர். ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் இன்று ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மொட்டை அடித்து ஒட்டு மொத்தமாக தீர்மானத்தை நிறைவேற்றுவோம். மேலும் அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து அவர் முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்துவோம். சசிகலா ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை வைப்போம் என்று அவர் கூறினார்.